Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகள் துள்ளிக்கிட்டு.. ; சேதமான வேலிகளால் வனப்பகுதிக்குள் ஓட்டம்.
31 days ago
23 Feb 2026
அலங்காநல்லுார்: கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தின் காளை சேகரிக்கும் பகுதி தடுப்பு கம்பி வேலிகள் சேதமடைந்துள்ளன. காளைகள் வெளியேறி வனப்பகுதிக்குள்ளும் குடியிருப்புகளுக்கும் செல்வதால் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். அலங்காநல்லுார் அருகே குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி கீழக்கரை வகுத்து மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம், இதற்கான சாலை நில ஆர்ஜிதம், விரிவாக சாலைகள் என ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த 2024ல் ஒரு போட்டியும், 2025ல் 19 போட்டியும், 2025ல் இதுவரை 10க்கும் மேற்பட்ட போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை பராமரிப்பு, கட்டுப்பாட்டில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி பொழுதுபோக்கு மற்றும் கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வாடிவாசல் பின்புறம் காளைகள் வரும் பகுதியில் கம்பி வலைகள், காளை சேகரிக்கும் பகுதியில் தடுப்பு கம்பி வேலிகள் பல இடங்களில் சேதமடைந்தும், சேதப் படுத்தப்பட்டு உள்ளதால் காளைகள் அதன் வழியாக வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடுகின்றன. இருநாட்களுக்கு முன் அழகாபுரி, கோவிலுார், குட்டிமேய்க்கிபட்டி குடியிருப்பு பகுதிக்குள் 3 காளைகள் புகுந்தன. அவற்றைப் பிடிக்க முடியாமல் பல நாட்கள் உரிமையாளர்கள் அலையும் நிலை உள்ளது. மேலும் விவசாய கிணறுகளில் விழுந்து காளைகள் மீட்கப்பட்டுள்ளன. பாசன கால்வாயில் விழுந்த காளை இறந்தது.
எனவே காளை சேகரிக்கும் பகுதி தடுப்பு வேலிகளை பராமரிக்க சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளை உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
Namma Madurai
Local News & Updates